Monday, August 23, 2010

எத்தனை நடக்குமோ?

செத்து பிறந்த உம் மானமினி இங்கு
கத்தும் குரல் கேட்கும் - உன் சுகம்
வித்து பிழைத்த காட்டேரி இனி உன்
முத்தத்தை தினம் ஆளும்

பத்து வயதில் பார்த்த வதைகள் - நின்
புத்தியிலே வற்றிப் போகும்
சொத்து சுகமுடன் சொற்பனமாய் வாழ
சித்தம் துடிக்கும் சுகத்தை தேடும்

வத்தை வரம்பெல்லாம் சிங்களம் பேசும்
நித்தம் ஓர் துளியாக செந்தமிழ் சாகும்
கத்தை கத்தையா காணிகள் போகும்
பித்து பிடித்தங்கே நம் தாகம் அலையும்

குத்தகை சொத்தெல்லாம் பத்திரம் மாறும்
சித்திரத்தோடு நம் வரலாறும் மாறும்
பத்திரமாக செதுக்கிய சிலைகளில்
புத்த கொடியிங்கு வீரமாய் பறக்கும்

முத்தமிழ் குமரனின் காலாட்படையில் உன்
இரத்தம் குடித்தவன் சேனதிபதியாவன்
இத்தனை நடந்தது  எத்தனை நடக்குமோ?
மோட்சம் இன்றியே நம்முயிர் அழியுமோ?

சிகரன் மனதில் பட்டவை ..!
23 August 2010 


No comments:

Post a Comment