Saturday, May 29, 2010

திவசம்

ஊற்றெடுத்தோம்  பத்து மாதம்
உடன்  பயின்றோம் சில  மாதம்
சேர்ந்திருந்தோம் சில மாதம்
பிரிந்திருந்தோம் பல மாதம்

வம்பளத்தோம் சும்மா தம்
மார் தட்டினோம் பிரமாதம்
அம்மா தம் முதுசமதை
நிராதாரம் செய்து வைத்தோம்


கண்டதற்கும் பரிகாசம்
கொண்டதற்கு வெளி வேஷம்
உள்ளுக்குள் சில்மிஷங்கள்
ஊருக்குள் வெடி விஷங்கள்
******************************************


இதிகாசம் படிக்காமல்
உபதேசம் செய்வித்தோம்
பாசறை அவனதுவென
பரதேசியாய் திரிந்தோம்


தோளுக்கு தோள் கொடுக்க
கால் சக்தி இல்லையென்று
வால் பிடித்தவனை - பார்
ஆள் என்று சொல்லிவைத்தோம்


வாள் கொண்ட செங்குருதி
பாழ் பட்டு போகையிலே - புத்தகத்
தாள் தான் நம் கதியென்று
மேல் படிப்பு படித்திருந்தோம்
*****************************************





சன்னச் சத்தம் கேட்டாலே
மனம் வாடிப்போகுமெண்டு
கனடாக்கு போய் நிண்டு
இன்டெர் நெட் பார்த்திருந்தோம்


கோலங்களோட 
சிலம் டாக் மில்லியனைர்
சித்தி முடிஞ்சோன 
சக்தி சுப்பர் ஸ்டார்  


இன்னும் காணாது - சில்லி 
சிக்கன் லெக் வேணுமெண்டும 
சைனீஸ் உணவுண்டும 
திண்டு திளைத்திருந்தோம்
*****************************************


வைகாசி விடுமுறையாம்
காசிக்கும் போகவேணும்
நேசம்மா செத்துப்போனா
திவசமாம் போகவேணும்


பாசும் இல்லையாம்
பஸ்சும் ஓடுதாம்
பசங்களுக்கும் காட்டவேணும்
கசூரினா பீச் ஒருக்கா !


ஏ சி யோட பஸ் ஆம்
டி வீ யும் இருக்காம்
குத்தாமல் குலுக்காமல்
குவிக்க்காக போகுதாம் 
*****************************************


போனமுறை வந்த போது
வான் வந்து பிடிக்குமெண்டு
சாமான் வாங்கக் கூட
அம்மா விடேல்ல .


இந்த முறை போய்
சந்தெல்லாம் திரிய வேணும்
சொந்தம் சொத்தெல்லாம்
வந்து தான் பார்க்க வேணும்

ஹமீடியா போகவேணும்
வீடுக்க போடுறதுக்கு
ஜக்கட் கொஞ்சம் வாங்கவேணும்
முடிஞ்சா ஒருக்கா கதிர் காமம் போகவேணும்
*******************************************************


செத்துப்போன நேசம்மா
சொத்துப் புரளியெல்லாம்
பார்த்து முடிக்கோணும்
பத்து நாளுக்கை..!


அத்தி மரத்து அம்மனுக்கு
குத்தரிசி பொங்கவேணும்
சித்தப்பா வீட்டுக்கு
சுத்து மதில் கட்டவேணும்


காக்கை தீவு நண்டுக் கூழ் 
மூக்கு முட்ட குடிக்க வேணும் 
செக்கு நல்லெண்ணெய் தேய்த்து 
வக்கில குளிக்க வேணும் 
*******************************************************

இத்தனை வேண்டுதலும்
சத்தமின்றி செய்வதற்க்கு
இத்தேசம் என்ன? நீ வருந்திப
பெற்ற தாய்நாடா?


கட்டபொம்மன் வசனம் பேச 
நாட்டிலே யாரும் இல்லை!
எட்டப்பன் ஆளும் நாட்டில்  
சட்டங்கள் எதுவும் இல்லை!


வா, வந்து பார்
சாக் காடாய் கிடக்கும்
பூச் சோலைகளில்
சாக்கடைகளின் உதிரத் தாண்டவத்தை
******************************************************


முத்தமிழ் கேட்ட மண்ணில்
குற்றுயிராய் கிடக்கும் மொழியை பார்
அத்தி மரத்து அம்மன் இப்போ
புத்த மதம் கூறும் பார்

சித்திரை திருவிழாக்கள்
சிங்களத்தில் நடக்குது பார்
முத்துமாரி தீர்த்தக்கேணி
நீச்சல் குளம் ஆனது பார்


காலிழந்த மயிலை பார்
கழுத்துடைந்த குயிலைப் பார்
வட்டிழந்த பனையை பார்
கட்டில்லாத குளத்தை பார்
*******************************************************

வா! வந்து சேர் !
செடி முளைத்த சமாதிக்கு 
சுத்துமதில் கட்டு 
நேசம்மா தூங்கட்டும் நிம்மதியாக

பத்திரிகையடித்து
பத்து கறியுடன் சோறு போடு
நித்தம் உறங்கட்டும் நேசம்மா
சத்தம்  ஏதும் இல்லாமல்

இது நேசம்மா திவசமில்லை 
எமது தேசத்தின் திவசம்!  
நம் மண் வாசத்தின் திவசம் !
எம்மை பிரிந்த நேசத்தின் திவசம்!


வைகாசி 2010
சிகரன் 

Thursday, May 27, 2010

கந்தர்வ காதல்

மன்மதக் காலை 
சொன்னது சேதி 
கந்தர்வ காதல் 
செய்தது மீதி


தந்தி தொடுத்தது 
ஏகாந்த நினைவு 
சிந்தித்  தெறித்தது
தேகாந்தமெங்கும் 


கோபதாபங்கள் 
இதம் கொண்டது 
விரக தாபங்கள் 
மதம் கொண்டது

மாற்றம் அறிந்தனம் 
சூளுரை கலைந்தனம் 
முற்றும் அறிந்தனம் 
முழுமையும் கண்டனம் 


மாற்றம்  புரிந்தனம் 
சூளுரை கொண்டனம் 
முற்றும் தெரிந்தனம் 
முழுமையை வெறுத்தனம்


கோபதாபங்கள் 
மதம் கொண்டது 
விரக தாபங்கள் 
இதம் கொண்டது  


இனி 


சிந்தி தெறிக்கும் 
ஏகாந்த நினைவை 
தேகாந்தமெங்கும்
தந்தி தொடுக்கும் 


மீண்டும் சேரும் மன்மதக் காலை 
மாண்டுபோகும் சீறிடும் ஊடல் 
செய்திகள் சொல்லும் 
கந்தர்வ காதலை !


சிகரன் 
27 May 2010 


( காதல் இங்கே மண்ணிற்கும் மனிதனுக்கும் )





Tuesday, May 25, 2010

பிறந்த நாள் வாழ்த்துகள்!

உன் அளவு கடந்த அன்பை கோபம்
எனும் ஆற்றாமைக்குள் மூட்டை   கட்ட முயலும் 
உன் முரட்டு விதண்டா வாதங்களால் 
கூனி குறுகி சிதைந்து சீரழிந்த 
என் நிறைவேறா அபிலாஷைகளுக்குள்
நின் நினைவுகளுடன் வாடி வதங்கி
தனித்தே இயங்க கற்றுகொண்ட 
என் இதயம் -
மீண்டும் ஒரு தடவை 
உன் வர விருக்கும் பிறந்த நாளையும்  கூட
மறந்து விடும் என்பது தான்
எந்நாளும் உண்மை ! 
மனது மறக்காத கற்பனை  கோட்டைகளுக்கு
அத்திவாரம்  போட்ட
உன் கடந்து போன
பிறந்த நாட்களுடன்....
மீண்டும் ஒரு பிறந்தநாளுக்காய்
பெரிதாய் ஒரு கூட்டை கட்டிக் கொண்டிருக்கும்
கற்பனைக் காவியத்துக்கு
முன்கூட்டிய
பிறந்த நாள் வாழ்த்துகள்;
என் மனது மட்டும் கேட்க்கும்  படியாக...!
சிகரன்
22 May 2010



Sunday, May 16, 2010

கனவு

கண்ட முதல் நொடியில்
கை குலுக்கி
காரிருளில் நடை பழகி
கணப்பொழுதில் அரங்கேற்றி
கண்டவரை மகிழ்வித்து
காணும்வரை காத்திருந்து
கடைசிவரைக்கும் பிரியாது
கதைகள் பல நினைத்து - நீ
கட்டிய கனவுக்கோட்டை
கடலலையாய் - உன் கண்களில்
கண்ணீராக!

21 April 2010