ஆயிரமாயிரம் அருமையான
ஆண்டவன் படைப்புக்களில்
அரும்பாக முளைத்த
அற்புதமான சிற்றுயிர்களில
நானும் ஒருவன்
சிறு வயதின் போராட்டங்கள்
அளவில் குறையில்லாமல்
எனக்கும் நிறைந்திருந்தது
கடுங்குளிர். கட்டுக்கடங்கா காற்று
கரை புரண்ட வெள்ளம் என
சீரழிந்த என் இளமைக்காலம்
சொல்லொணா காயங்களாய் - என்
ஆழ் மன வேர்களில் இன்னும் இருக்கிறது.
அரவணைக்கும் இயற்கையும்
விரிந்த வானமுமே
அடுத்தடுத்த கனவுகளுக்கு வழிகாட்ட
எனக்கான கனவையும்
நானும் கண்டிருந்தேன்.
வானம் தொடும் ஆசையில்
வாசனை மலர்கள் என்னுள் சிரிக்க,
வண்ணத்துப் பூச்சிகள் என் மடியில்
வட்டமிடும் கனவுகள் கண்டேன்!
ஓங்கி வளர வேண்டும்
ஒய்யார களிப்பு வேண்டும்
ஆடி அடங்க வேண்டும்
அன்பாக இருத்தல் வேண்டும்.
அளவிலா காதலுடன்
அன்பான துணையுடன்
அனைவருக்கும் - நிழல்
அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும்
கிளைகள் விரித்து நான் வளர - என்
தோள்களில் பறவைகள்
குடியேற வேண்டும்!
அடைக்கலம் தேடி வரும் உயிர்களுக்கு
ஆயுள் காக்கும் அரணாய் மாற வேண்டும்!
சிட்டுக்களும் (Wrens), செஞ்சாரைகளும் (Robins) - என்
சிறு கிளைகளில் ஊஞ்சலாட - பெரிய
சிட்டுகளும் (Great tits). நீலச் சிட்டுகளும் (Blue tits),
என்னை பெயர் சொல்லி அழைக்க வேண்டும் -நிதமும்
என் காதில் ரகசியம் பேச வேண்டும்!
துள்ளித் திரியும் அணில்கள் - என்
மார்பைத் தழுவ வேண்டும்!
பலவண்ணப் பறவைகள் பாடும் - அந்த
பரவசக் கீதத்தில் நான் நாளும்
உறங்க வேண்டும்!
தனிமரமாய் நில்லாமல் தாராளமாய் விதை பரப்ப
மண்ணில் விழும் என் ஒவ்வொரு துளியும்
மறுபடி ஒரு உயிராய் எழ வேண்டும்!
வளமான சிறு மரங்கள் நித்தமும்
என்னைச் சுற்றி வளர வேண்டும் _அவை
என் தோள் உரசித் தழுவ வேண்டும்!
கிளைகள் கோர்த்து நாங்கள் ஆடும்
கேலிக் கூத்துகள் விண்ணைத் தொட வேண்டும்!
எண்ணிலா கிளைகள் கொண்டு
தனக்கெனவோர் தோப்பமைத்து
வானம் தொடும் ஆசையில்
வாஞ்சையோடு நான் வளர
காலம் இட்ட கோலமோ
கண்முன்னே மாறியது.
திசை மாறிய பயணம்
மின்னல் வெட்டிய வேகத்தில்
பாதி உடல் கருகிப் போனது
ஏன்னை அறியாமல் என் கனவுகள்
மௌனமாய் விடைபெற்றது.
பாதி மரம் போன பின்பு
மீதி உயிரோடு நிற்கின்றேன்!
பாதியற்றுப் போனது
என் தேகம் மட்டுமல்ல
என் கனவுகளுந்தான்.....
சிகரன்
Rydal Mount
Lake District
30 March 2026




No comments:
Post a Comment