உருவேற்றியுள்ள க(வி)தை - இது ஒரு
உடைந்தவளின் உண்மைக்கதை!
உடைந்தவளும் உடைத்தவனும்
உரிமையாகவே தம்முள்
உள்ளம் தொலைத்தனர்.
உடைத்தவனும் மடையனானான்
உடைந்தவளும் மடைச்சியானாள்
உலகமே இதுதானென்று
ஊரறிய வலம் வந்தனர்!
உளமார காதலித்தனர்!
உடைந்தவள் வீட்டில் தடையில்லை
உரமாக இருந்தது அவளுணர்வு அங்கு
உற்றார் உடனிருந்தும்
உண்மையெதுவும் தெரிந்திருக்கவில்லை
உடைத்தவன் வீட்டில்
உளமே என்றனர்
உயிரே என்றனர்
உடைந்தவளும் உடைத்தவனும்
உயிரை பருகிக்கொண்டனர்?
உறவை வளர்த்துக்கொண்டனர்?
உலகம் உருண்டது
உளைச்சல் தொடங்கியது!
உன் மகன் ஓடி விட்டான் என்று
ஊர் பழி சொல்லுமென்று
உந்த காதலெல்லாம் செல்லாதென்று
உறுதியாக கூறினர்
உபதேசம் செய்தனர்
உடைத்தவன் வீட்டில் (2) -என்
உயிரற்ற உடல் தாண்டி
உன்னுயிரை ஏற்றுக்கொள் என்றனர்.
உடைத்தவன் மாறினான்
உறவை மாற்றினான்
உண்மையில் அவள் என் நண்பி என்றான்
உரிமைக்காதல் எப்போவோ
உடைந்து விட்டது என்றான்
உவள் என் வாழ்க்கைக்கு
உரியவளில்லை என்றான்
உவமானம் நிறையச் சொன்னான்
உத்தரவுகள் நிறையப் போட்டான்
உனக்கும் எனக்கும் இனி
உறவில்லையென்று
உறுதியாகச் சொன்னான்
உடைந்து போனாள் அவள்!
உதிரம் உறைந்தது அவளுக்கு!
உள்ளம் கொண்ட காதல் பரிசுகள்
ஊமையாகிவிட்ட காதல் சுவடுகள்
உதடுகள் கண்ட காதல் முத்தங்கள்
உலுப்பியெடுத்தன
உயிரைக் கரைத்தன
உலகமே இருண்டது
உயிர் விடத்துணிந்தது உடைந்தவள் உள்ளம்
உருக்குலைந்தது
உருக்கொண்டெழுந்தனர்
உடைந்தவள் வீட்டில்
உரக்க கத்தினர் - உடைத்தவன்
உயிரெடுப்பேனென
உறுமினர் உலகிற்கு!
உனக்காக எல்லாம் செய்வேன்
உனக்காக உயிரை விடுவேன் என்றவன் -இப்போ
ஊர்காவற் படையிடம் முறையிட்டான்
உடைத்தவன் குடும்ப மானம் காக்க
உடைந்தவள் குடும்ப மானம்
உயரப்பறந்தது ஊரில்
உடைந்தவள் அவள் பேரில்!
உள்ளாடை மாற்றக் கூட அவளுக்கின்று
உதவிகள் தேவை- இந்த
உலகில் அவள் பெயர் பைத்தியம்.
நன்றியுடன்
சிகரன்
30 March 2008
குறிப்பு : கவிதை யென்பதால் கடைசி வரி இன்று வரை பொய்
காதலில் தோல்வியென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment